Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் : செல்வ சுப்பிரமணியன் Vs சுப்பு ரத்தினம்

ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் உள்ளது என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றம் " S. R. சீனிவாசா Vs பத்ம வாத்தம்மா (2010-5-SCC-274)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.

இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 ஆனது ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு உயிலில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளவர்கள் உயிரோடு இருந்தால் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தால் அவர்களில் ஒருவரையாவது சாட்சியாக விசாரித்துக் அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஒருவர்கூட உயிரோடு இல்லை என்றால் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 69 ல் கூறப்பட்டுள்ளவாறு சாட்சிக் கையொப்பம் போட்டுள்ளவர்களில் ஒருவருடைய கையெழுத்தை தெரிந்துள்ள நபரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு கையெழுத்தை மட்டும் அடையாளம் காட்டுபவர் அந்த உயில் எழுதப்பட்டதை குறித்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சென்னை உயர்நீதிமன்றம் " ஜானகிதேவி Vs R. வசந்தி மற்றும் பலர் (2005-1-LW-455)" என்ற வழக்கில், இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 யைப் படித்து பார்த்தால், உயிலில் சாட்சிக் கையொப்பமிடுவதும், உயிலை எழுதுவதும் வெவ்வேறான சங்கதிகளாகும். ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருகிறது என்றும், ஒரு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தால், அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபித்து விட்டதாக கருத முடியாது, ஒரு வழக்கில் உயிலை நிரூபிக்க எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நிலையில் தான் உயில் பதிவு செய்யப்பட்டதற்காக இந்திய பதிவுச் சட பிரிவு 60 ன்படி சார் பதிவாளரால் வழங்கப்படுகின்ற சான்றிதழை, உயில் எழுதப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் "கற்பகம் Vs E. புருஷோத்தமன் மற்றும் இருவர் (2010-3-LW-282)" என்ற வழக்கில், ஒரு உயில் எழுதப்பட்டது குறித்து மிகத் கடுமையாக மறுத்துரைக்கப்படாத நிலையில்,  உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஒரு உயிலை நிரூபிப்பதற்கு அதில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களில் ஒருவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். யாரும் உயிருடன் இல்லாத பட்சத்தில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களின், கையெழுத்தை அடையாளம் காட்டக்கூடிய ஒருவரை சாட்சியாக விசாரித்து உயிலை நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

A. S. No - 159/2013

Dt - 25.3.2015

செல்வ சுப்பிரமணியன் Vs சுப்பு ரத்தினம்

2015-3-LW-7