உயர்நீதிமன்றப்பதிவாளர் மீது பொய்வழக்கு : தள்ளுபடி/அபராதம்/நீதிமன்ற அவமதிப்பு /தொழில் தடை
*******************************************
சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர் ஒருவர் உரிய கல்வித்தகுதி இன்றி பணியில் தொடர்வதாகவும், அவரை நீக்கம் செய்யக்கோரியும் சென்னை வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு இன்று தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி திரு.செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பதிவாளரின் அனைத்து அசல் ஆவணங்களையும் நீதிமன்றத்திற்கு வரவழைத்த நீதிபதிகள், அவற்றை வழக்கறிஞருக்கும் காண்பித்தனர். சம்பந்தப்பட்ட பதிவாளர், 1982-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். 1984-ம் வருடம் +2 தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்பும் அதன்பிறகு மூன்றாண்டு சட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றுள்ளார். எனவே அவரது கல்வித்தகுதியில் எவ்வித குறையுமில்லையென்றும் மனுதாரர் உள்நோக்கத்துடன், அந்த பதிவாளரை களங்கப்படுத்தும் நோக்குடன் ரிட்மனு தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த ரிட் மனுவின் தவறான செய்திகள் மீடியாக்களில் பெருமளவு வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரரின் இந்த திட்டமிட்ட செயல் நீதிமன்றத்தோடு விளையாடும் பொறுப்பற்ற செயல். நிவர்த்திசெய்ய இயலாத அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இதை அனுமதிக்க முடியாது. மனுதாரர் இதற்கு முன்பும் இதுபோன்ற வழக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே, மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்த டிவிஷன் பெஞ்ச், மனுதாரர் மீது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை சம்பந்தப்பட்ட பதிவாளருக்கு வழங்கிடவும் உத்தரவிட்டது. மேலும், மனுதாரர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து வருகிற 28--ம் தேதி அவர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென்றும், அந்நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் வரை மனுதாரர் தமிழ்நாட்டில் வழக்கறிஞராக தொழில் புரியக்கூடாதென தடைவிதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
