தினக்கூலி, ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர ஊழியர்களை போல ஊதியம் வழங்க உத்தரவு
உயர்நீதிமன்றம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, அதே பணியைச் செய்யும் நிரந்த ஊழியர்களைப் போல ஊதிய நிர்ணயம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த ராஜாசெல்வன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்* *செய்த மனு.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை பராமரிக்கும் பணியில் பொதுப்பணித்துறை, மின் வாரியம் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த பணியாளர்களாக பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் நேரடியாக ஒப்பந்த பணிக்கு அமர்த்தாமல் இடைத்தரகர்கள் மூலம் நியமித்துள்ளனர்*.
இதனால் இந்த ஊழியர்களுக்கு மிகக்குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிந்து வரும் இவர்களுக்கு முறையான வருகைப் பதிவேடும் இல்லை. எனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி உரிய ஊதியம் வழங்க வேண்டும்.
அதனை ஒப்பந்ததாரர்கள் மூலமாக வழங்காமல், நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். ஊழியர்களுக்கு முறையான வருகைப் பதிவேடு பயோ-மெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்யவேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
உயர்நீதிமன்றம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, அதே பணியைச் செய்யும் நிரந்த ஊழியர்களைப் போல ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
பொதுப்பணித்துறையின் கீழ் பணியாற்றும், தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் தற்காலிக, தினக்கூலி பணியாளருக்கு வழங்கும் ஊதியத்தை போல் ஊதியம் வழங்க வேண்டும். ஊதியம் தொடர்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் பிப்ரவரி 22-க்குள் அரசாணை வெளியிட வேண்டும்.
இடைத்தரகர்கள் மூலமாக அன்றி பொதுப்பணித் துறையினரே பணியாளர்களை பணியமர்த்தி*, அவர்களுக்கான பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.
தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்*. *தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதிய வரைமுறை குறித்து அரசாணை வெளியிடப்பட வேண்டும்.
ஏப்ரல் 1 முதல் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகைப்பதிவு பின்பற்றப்பட வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள தினக்கூலி மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கான ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில், 24 மணிநேரமும் செயல்படும் மருந்தகத்துடன் கூடிய மருத்துவமனையை அமைக்க வேண்டும். பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் இந்த மருத்துவமனை அமைய வேண்டும்.
செயற்பொறியாளருக்கு தனி அலுவலகம் அமைத்துத் தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
