FIR மற்றும் புலன்விசாரணைக்கு பின்னர் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட இறுதியறிக்கை ஆகியவற்றில் ஒருவரின் பெயர் இல்லை என்றாலும் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவரை அந்த வழக்கில் எதிரியாக சேர்த்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா?
அம்ரோகா தலைமை குற்றவியல் நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஹர்தேய் என்பவரை ஒரு குற்ற வழக்கில் எதிரியாக சேர்த்ததை எதிர்த்து இந்த மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420,467,468,471,409 பற்றியதாகும்.
FIR ல் ஹர்தேய் பெயர் இல்லை. இறுதியறிக்கையிலும் இல்லை. ஆனால் தலைமை குற்றவியல் நடுவர் சாட்சிகளை விசாரித்த பின்னர் ஹர்தேய் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறி அவருக்கு அழைப்பாணை அனுப்பினார்.
மேல்முறையீட்டை நீதிபதிகள் திரு. தீபக் மிஸ்ரா மற்றும் சிவகீர்த்திசங் ஆகியோர்கள் விசாரித்தனர்.
ஒரு FIR ல் சம்பவம் குறித்த அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும் அல்லது அனைத்து எதிரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
குற்றங்களில் பல்வகை குற்றங்கள் உள்ளது. சில குற்றங்கள் விரிவான புலன்விசாரணைக்கு பிறகுதான் கண்டறிய முடியும். கூட்டுசதி, பொருளாதார குற்றங்கள், நேரில் பார்க்க முடியாத குற்றங்கள் போன்றவற்றில் உண்மையை புலன்விசாரணைக்கு பின்னர் தான் கண்டறிய முடியும். காவல்துறை சந்தேகப்படும் ஒரு நபரை அந்த வழக்கில் ஓர் எதிரியாக சேர்க்காமல் விட்டுவிட்டாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 319 ன் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அது பாதிக்காது. அந்த வழக்கு விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் வழக்கில் சேர்க்காமல் விடப்பட்ட எதிரிக்கு நீதிமன்றம் அழைப்பாணையை அனுப்பலாம்.
எனவே முதல் தகவல் அறிக்கை மற்றும் புலன்விசாரணைக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட இறுதியறிக்கை ஆகியவற்றில் ஒருவரின் பெயர் இல்லை என்றாலும் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவரை அந்த வழக்கில் எதிரியாக சேர்த்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. A. NO - 186/2016
dt - 30.3.2016
ஹர்தேய் Vs உத்திர பிரதேச மாநில அரசு
2016-1-TLNJ-396