நாடு முழுவதும் வக்கீல்களில் 45 சதவீதம் பேர் போலி : இந்திய பார் கவுன்சில் 'பகீர்'
2017-01-23 19:58:08
புதுடெல்லி : நாடு முழுவதும் உள்ள வக்கீல்களில் சுமார் 45 சதவீதம் பேர் போலி வக்கீல்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் முறையாக பதிவு செய் யாத போலி வக்கீல்கள் பணிகளில் ஈடுபடுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹருக்கு பாராட்டு விழா நடந்தது. இதில், இந்திய பார் கவுன்சில் தலைவர் மனான் குமார் மிஸ்ரா கலந்து ெகாண்டு ேபசும் போது, ''நாடு முழுவதும் ஏராளமான போலி வக்கீல்கள் உலா வருவதாக புகார்கள் வந்ததால், தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளுக்கு பின், வக்கீல்களின் எண்ணிக்கை சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு அகில இந்திய பார் கவுன்சில் தேர்தல் நடந்த போது, சுமார் 14 லட்சம் வக்கீல்கள் வாக்களிக்க பதிவு செய்தனர். இவற்றை தீவிரமாக ஆய்வு செய்ததில் தற்போது 6.5 லட்சம் பேர் மட்டுமே வாக்களிக்க விண்ணப்பம் அளித்திருக்கின்றனர். இதன் மூலம், போலி வக்கீல்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வக்கீல்கள் போர்வையில் உலா வரும் போலி ஆசாமிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.
போலி வக்கீல்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இந்திய பார் கவுன்சிலை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் பாராட்டினார். முறையான பட்டம் பெறாதவர்கள், போலி பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட பல்வேறு போலி வக்கீல்களை கண்டறிந்து அவர்கள் ஏமாற்றுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பார் கவுன்சிலை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், வக்கீல்கள் பதிவு செய்து கொள்வதில் உள்ள தாமதங்களை நீக்கி முறைப்படுத்த பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.