பலாத்கார வழக்கு: ஏன் போலீஸ் ஒழுங்கா விசாரிக்கலை? டிஜிபியை ஆஜராக சொல்லனுமோ? ஹைகோர்ட் காட்டம்
சென்னை: நெய்வேலி இளம்பெண் பலாத்காரம் தொடர்பாக 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் டி.என்.ஏ. சோதனை நடத்தவில்லை; அடையாள அணிவகுப்பும் நடத்தவில்லை; முறையான விசாரணை கூட செய்யவில்லை என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் டிஜிபியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லி உத்தரவிட வேண்டுமோ என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.2011-ம் ஆண்டு நெய்வேலி அருகே இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை நெய்வேலி லிக்னைட் நிறுவன போலீசார் புலன் விசாரணை நடத்தி கிருஷ்ணராஜ் என்பவர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கின் விசாரணையில் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.இம் மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, இளம்பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. டிஎன்ஏ சோதனையும் நடத்தவில்லை. அடையாள அணிவகுப்பு நடத்தவில்லை. இதனால் ஆயுள் தண்டனை விதித்த 5 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார்.இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் மேலோட்டமாக விளக்கம் அளித்தார். இதை கேட்ட நீதிபதிகள், இவ்வழக்கின் கோப்புகளை ஆராய்ந்து பார்த்தோம். போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று தெளிவாக தெரிகிறது. போலீசார் ஏன் இத்தகைய வழக்கில் மெத்தனமாக உள்ளனர். இது வேதனை அளிக்கிறது. டிஎன்ஏ சோதனை கூட நடத்தவில்லை. அடையாள அணிவகுப்பும் நடத்தவில்லை. சாட்சிகளிடம் சரியாக வாக்குமூலம் வாங்கவில்லை. அவர்கள் என்ன வாக்குமூலம் அளித்தார்கள் என்று பதிவு செய்யவில்லை. போலீசார் கொஞ்சம் கூட புலன் விசாரணை செய்யவில்லை.இதனால் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றே எங்களுக்கு தெரியவில்லை.போலீசாருக்கு திறமை இல்லை. திறன் குறைவாக உள்ளது. ஏன் போலீஸ் டிஜிபியை நேரில் அழைக்கக் கூடாது? என்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அரசு வழக்கறிஞர், டிஜிபி நேரில் ஆஜராகாமல் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு நெய்வெலி என்.எல்.சி. இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.